மருதமலையில் காட்டுயானை தாக்கி தனியார் நிறுவன காவலாளி உயிரிழப்பு

 

மருதமலையில் காட்டுயானை தாக்கி தனியார் நிறுவன காவலாளி உயிரிழப்பு

கோவை

கோவை மாவட்டம் மருதமலை அடிவார சாலையில் நடந்துசென்ற தனியார் நிறுவன காவலாளி, ஒற்றை காட்டுயானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிவாஸ்(65). இவர் மருதமலை சாலை இந்திரா நகர் பிரிவு அருகேயுள்ள தனியார் வாகன பைனான்ஸ் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இன்று காலை 6 மணியளவில் டீ குடிப்பதற்காக முகமது நிவாஸ் கேட்டை மூடிவிட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உலாவும் காட்டுயானை ஒன்று, சாலையை கடந்து சென்றுள்ளது. பனி மூட்டம் காரணமாக அதனை கவனிக்காமல் சென்ற நிவாஸை, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருதமலையில் காட்டுயானை தாக்கி தனியார் நிறுவன காவலாளி உயிரிழப்பு

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மார்கழி மாதம் என்பதால் காலைநேரத்தில் மருதமலை கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், முதியவரை காட்டு யானை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருதமலை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காட்டுயானைகள் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.