மழையில் மதில்சுவர் இடிந்த விபத்தில், கூலி தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் மழையில் சேதடைந்த மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த தேவனாம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவர் நேற்று வடக்கிப்பாளையம் பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். பணியின் இடையே மதிய உணவிற்காக தொழிலாளர்கள் அனைவரும் அங்குள்ள வீடு ஒன்றின் மதில் சுவர் அருகே அமர்ந்து இருந்துள்ளனர். அப்போது, மழையினால் சேமடைந்திருந்த அந்த மதில் சுவர் திடீரென மணிகண்டன் மீது இடிந்து விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி அவரை மீட்டனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்தபகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தேவனாம்பாளையம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.