“கொரோனாவுக்கு அரிதான மருந்து”… பாம்பை உயிருடன் கடித்து தின்று, வீடியோ வெளியிட்டவர் கைது!
மதுரை
வாடிப்பட்டி அருகே கொரோனாவுக்கு மருந்து என கூறி பாம்பை உயிருடன் கடித்து தின்றதுடன், அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பொருமாள்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு. கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கிராமத்தில் சுற்றித்திரிந்த விஷமில்லாத பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். பின்னர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாம்பு இறைச்சி அரிதான மருந்து என கூறியபடி, அந்த பாம்பை உயிருடன் அவர் கடித்து திண்றார்.
இதனை, வடிவேலுவின் நண்பர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, யூடியூபில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுகக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வீடியோ விவகாரம் குறித்து அறிந்த மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று வடிவேலுவை அதிரடியாக கைது செய்தனர். மேலும், பாம்பினை கடித்து கொன்ற குற்றத்திற்காக அவருக்கு ரூ.7,500 அபராதம் விதித்தனர்.