கனிமொழி Vs உதயநிதி – திமுகவில் புதிய பூகம்பம்

 

கனிமொழி Vs உதயநிதி – திமுகவில் புதிய பூகம்பம்

‘விடியலை நோக்கி.., ஸ்டாலினின் குரல்’ என்கிற பிரச்சார நிகழ்ச்சி, திமுகவிற்குள் பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அதிகரிக்கும் செலவுகளால் கட்சி நிர்வாகிகள் கலங்கிப்போய் நிற்க, விளம்பர மோகத்தால் மேலிடப் புள்ளிகள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர்.

கனிமொழி Vs உதயநிதி – திமுகவில் புதிய பூகம்பம்

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘விடியலை நோக்கி.., ஸ்டாலினின் குரல்’ என்கிற பிரச்சார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. திருச்சி சிவா, தயாநிதி மாறன், லியோனி என பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் கனிமொழி, உதயநிதி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் கனிமொழிக்காக அவரது ஆதரவாளர்கள் வரிந்துகட்ட, தலைமையின் உத்தரவின் பேரில் கட்சி நிர்வாகிகள் உதயநிதியை தூக்கிப் பிடிக்கின்றனர்.

போஸ்டர்கள், விளம்பர பதாகைகள், சுவர் மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் உதயநிதி ஆட்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தும், கனிமொழி தரப்பு அவரை உயர்த்திப் பிடித்தும் வெளியிட்டு வருகின்றனர். ஒருசில இடங்களில் உதயநிதி ஓரங்கட்டப்பட, பல இடங்களில் கனிமொழி இருட்டடிப்பு செய்யப்பட்டார். இதனால் இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.

இது குறித்தத் தகவல்கள் சென்னைக்குத் தெரியவர, ஸ்டாலினின் கிச்சன் கேபினட் கொந்தளித்திருக்கிறது. ’’சொகுசா நடித்துக்கொண்டிருந்த பிள்ளையை அரசியலில் இறக்கிவிட்டு இப்படி அசிங்கப்படுத்த வேண்டுமா? மாநிலம் முழுவதுமே உதயாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லுங்க’’ என குரல் எழுப்ப, ஸ்டாலின் ரொம்ப சங்கடப்பட்டே சமாதானப் படுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் இந்த விவகாரம் பற்றி மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த, ‘’ தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற உட்கட்சி பிரச்சனைகளுக்கு உடனடியாக அணை போட வேண்டும். அதனால உங்க படத்தைத் தவிர வேறு யார் படத்தையும் போட வேண்டாம் என உத்தரவு போடுங்க’’ என அவர்கள் சொல்ல அதன்படியே அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஸ்டாலின். ஆனாலும் விளம்பர அக்கப்போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது

கனிமொழி Vs உதயநிதி – திமுகவில் புதிய பூகம்பம்

இது ஒருபுறமிருக்க, விடியலின் குரல் நிகழ்ச்சிக்கான செலவுகள் அனைத்தும் கட்சி நிர்வாகிகள் தலையில் கட்டப்படுவதால் அவர்கள் நொந்து நூலாகியுள்ளனர். ’’தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே உள்ள நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வது நல்லது என தோன்றுகிறது. வேட்பாளரை அறிவித்துவிட்டால் பிரச்சார செலவு முழுவதும் அவர் பக்கம் சென்றுவிடும். சுமை அதிகம் என்றாலும் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இப்ப தேவையில்லாமல் ஆளாளுக்கு செலவு பண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் பெரும் பொருட்செலவால் 95 சதவீத நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவர்களின் எண்ண ஓட்டத்தை தலைமை இப்போதேனும் புரிந்து கொள்ளாவிட்டால் நிச்சயம் சிக்கல்தான்’’ என்கிறார்கள் திமுக மாவட்ட நிர்வாகிகள்.