“சிலரே இறப்பிற்குப் பின்னும் இருப்பர்” – வைரலாகும் விவேக் அன்றே எழுதிய அஞ்சலி!

 

“சிலரே இறப்பிற்குப் பின்னும் இருப்பர்” – வைரலாகும் விவேக் அன்றே எழுதிய அஞ்சலி!

தமிழ் சினிமாவில் காலம் போற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். சினிமாவில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக மக்களுக்குப் புரிய எளிய முறையில் நகைச்சுவையால் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்தவர். மூட நம்பிக்கைக்கு எதிரான பெரியாரின் கருத்துகளைப் பரப்பிய விவேக் ஒரு பழுத்த ஆன்மிகவாதி.

“சிலரே இறப்பிற்குப் பின்னும் இருப்பர்” – வைரலாகும் விவேக் அன்றே எழுதிய அஞ்சலி!

நடிகர் என்ற ஒரு குட்டையில் மட்டும் ஊறிவிடாமல் இசை, எழுத்தாளர், கவிஞர், சமூக செயற்பாட்டாளர் என ஒவ்வொரு அங்கத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் விவேக். அவர் இப்பூவுலகை விட்டுச் சென்றாலும் அவர் நட்ட மரங்கள் அவருக்காகச் சுவாசிக்கும். அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் வடிப்பது சாதரணம் தான். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாடே கண்ணீர் சிந்துகிறதே அதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கிறது.

ஜனங்களின் கலைஞனான விவேக் மறைவுக்கு இணையதளங்களில் உலாவும் ஜனங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, மூத்த அரசியல்வாதி தோழர் தா.பாண்டியன் மறைவுக்கு அவர் எழுதிய அஞ்சலி வார்த்தைகள் இன்று அவருக்கே உரித்தாக்கி விட்டார்கள் பொது ஜனங்கள். அவர் எழுதிய அஞ்சலியில், “எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பகிர்ந்து நீங்களும் இறப்பிற்குப் பின்னும் இருப்பீர்கள் விவேக் சார் என்று கண்ணீர் வடிக்கின்றனர்.