நீங்கள் எப்போதுமே என் கேப்டன் தான்; என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன்: கோலி

 

நீங்கள் எப்போதுமே என் கேப்டன் தான்; என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன்: கோலி

தல, கூல் கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சுதந்திரதின கொண்டாட்டத்தில் திளைத்திருந்த இந்திய மக்களுக்கு தோனியின் அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியது. தோனியை தொடர்ந்து ‘சின்ன தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தும் அவர் குறித்து புகழாரம் சூட்டியும் வருகின்றனர்.

பி.சி.சி.ஐ -யின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலமாக தோனிக்கு நன்றி தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி, “தோனிக்கு நன்றி. இப்போது மட்டுமல்ல எப்போதுமே நீங்கள் என் கேப்டன் தான். வாழ்க்கையின் சில தருணங்களில் வார்த்தைகளே வராமல் ஸ்தம்பித்து நிற்போம். அப்படி ஒரு தருணமாக இதை பார்க்கிறேன். உங்களுக்கும் எனக்கும் இடையே சிறந்த நட்புறவும், புரிதலும் இருந்தது. நீங்கள் எப்போதுமே அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்ற குறிக்கோளோடு இறுதி வரை விளையாடுவீர்கள். என் கிரிக்கெட் வாழ்க்கையே உங்களது தலைமையின் கீழ் நான் ஆரம்பித்தது எனக்கு பெரு மகிழ்ச்சி. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு என்றுமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.