தீண்ட தகாத ஊரானதா? சென்னையில இருந்து வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்காதீங்க! வைரலாகும் தண்டோரா!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஐந்து கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பாதிப்பு குறையவில்லை. கிட்டத்தட்ட 60 நாட்களாக ஊரடங்கு போடப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்ததை கருத்தில் கொண்ட அரசு கடைகள்,தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட அனுமதி அளித்து ஊரடங்கை ஓரளவு தளர்த்தியது. அதனால் தமிழகத்தில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வேலைக்காக தங்கியிருந்தவர்கள் தங்களின் சொந்த ஊர் நோக்கி பயணித்தன. இ-பாஸ் இன்றி செல்லும் எல்லா வாகனமும் மாவட்ட எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
சென்னையில இருந்து வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்காதீர்கள் வைரலாகும் தண்டோரா…#சென்னை #ChennaiLockDown #coronavirus pic.twitter.com/bNCnQu5bJQ
— Top Tamil News (@toptamilnews) June 20, 2020
இந்நிலையில் சமூக வலைதளத்தில் தண்டோரா வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “கிராம பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்… சென்னையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ளதால் கிராம மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து வருபவர்களை யாரும் அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது மாவட்ட ஆட்சியர் உத்தரவு” என்று தண்டோராக்காரர் கூச்சலிட்டு செல்கிறார்.