அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர்… குணமடைய விஜயகாந்த் வாழ்த்து!
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். குடலிறக்கம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்ட பின் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு வெற்றிக்கரமாக அறுவைச் சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார். முதலமைச்சர் குணமடைய கட்சி பாகுபாடின்றி பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் விரைவில் குணம்பெற வாழ்த்து சொல்லியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியிலிருந்த தேமுதிக தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியது. கீழ்மட்ட தொண்டர்கள் முதல் உயர் மட்ட தலைவர்கள் வரை அதிமுகவையும் அதன் தலைவர்களையும் சரமாரியாக விமர்சித்தனர். அதற்குப் பின்னர் அமமுகவுடன் கூட்டணி உறுதியானது. தேர்தலில் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டுள்ளது.