குணமடைய வாழ்த்திய விஜய் வசந்த் எம்பி… நன்றி கூறிய பொன்னார்!

 

குணமடைய வாழ்த்திய விஜய் வசந்த் எம்பி… நன்றி கூறிய பொன்னார்!

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பலரும் உயிரிழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குணமடைய வாழ்த்திய விஜய் வசந்த் எம்பி… நன்றி கூறிய பொன்னார்!

கொரோனா இரண்டாம் அலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார். அதன் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் குணமடைய வாழ்த்து கூறியிருக்கிறார். அவர் செய்த ட்வீட்டில், “திரு பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு, குணமடைந்து மக்கள் பணி தொடர்ந்திட எனது பிரார்த்தனைகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள பொன்னார், “நன்றி. விரைவில் நலமுடன் திரும்பிடுவேன். தங்களின் பிரார்த்தனைக்கு எனது உளபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்திடம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 950 வாக்கு வித்தியாசத்தில் பொன்னார் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.