’சூரரை போற்று’ படத்தை அடுத்து ஓடிடி வலையில் சிக்கிய க/பெ.ரணசிங்கம்!
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்ம துரை, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். இப்படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பிரச்னைகளை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அறம், ஐரா, தும்பா போன்ற படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயம், தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கடந்த மே மாதம் வெளியான க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஊரடங்கால் முடங்கி போயிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. டிசம்பர் வரை திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அதன் பின்னர் திறந்தாலும் திரையரங்குகளுக்கு கூட்டம் முன்பு போல் வருமா என்பது சந்தேகம் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை ஜீ 5 ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. ஆனால் படம் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்படவில்லை.