‘அத்திவரதர் போல விஜயகாந்த் வரும் போது பிரளயமே வரும்’ – விஜய பிரபாகரன் அதிரடி!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை எதிர் நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் தேமுதிகவும் ஒன்று.
கடந்த இரண்டு முறை சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, இந்த முறை கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்படுவதாக தெரிகிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, சசிகலா அரசியலுக்கு வர வேண்டும் என்றும் ஒரு பெண்ணாக அவருக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். சசிகலாவை எதிர்க்கும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பிரேமலதா, சசிகலாவை வரவேற்பதாக கூறியது சர்ச்சையை கிளப்பியது. இதன் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்காது என்பது தெளிவாகத் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், செங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வறுமை மற்றும் ஊழலை ஒழிப்பேன் என்று கூறிய ஒரே தலைவர் விஜயகாந்த் தான் என்றும் மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினாலேயே தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது; இல்லையெனில் திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டும்தான் என்று அதிரடியாக பேசினார்.
மேலும், விஜயகாந்த் தனது இலக்கை அடையாமல் ஓய மாட்டார் என்று கூறியவர், அத்தி வரதர் வருவது போல விஜயகாந்த் வரும்போது பிரளயமே வரும் என்றும் தெரிவித்தார்.