‘கெஞ்சிக் கேட்கிறேம்ம்மா… நாளைக்குப் படிச்சி சொல்றேம்மா’ குழந்தையின் கண்ணீர் வீடியோ #ViralVideo

 

‘கெஞ்சிக் கேட்கிறேம்ம்மா… நாளைக்குப் படிச்சி சொல்றேம்மா’ குழந்தையின் கண்ணீர் வீடியோ #ViralVideo

கொரோனா நோய்த் தொற்றால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அதனால் நாடு முழுக்கவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வு முதலில் ஒத்தி வைக்கப்படும் அறிவிப்பு வந்தது. அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் எல்லோரும் ஆல்பாஸ் செய்யப்பட்டார்கள். நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வரும் நிலையில் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தொடங்கிவிட்டனர். தமிழக அரசும் கல்வித் தொலைக்காட்சி வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது.

‘கெஞ்சிக் கேட்கிறேம்ம்மா… நாளைக்குப் படிச்சி சொல்றேம்மா’ குழந்தையின் கண்ணீர் வீடியோ #ViralVideo

ஆன்லைன் வழி கற்பித்தலுக்கு சமூக ஆர்வலர்களில் பெரும்பான்மையோர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். காரணம், அதனால் ஏற்படும் மன ரீதியான, உடல் ரீதியான பிரச்னைகளைப் பட்டியல் போடுகின்றனர். அதேநேரம் மிக நிண்ட இடைவெளியில் குழந்தைகள் பள்ளியோடு தொடர்பில்லாது இருந்தால் இடைநிற்றல் அதிகமாகி விடும் என்ற வாதமும் ஒருபக்கம் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் வழியாக பாடம் கற்கும் மாணவனின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

4 அல்லது 5 வயது இருக்கும் குழந்தைக்கு ஆசிரியர் ஹோம்வொர்க் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்தக் குழந்தை ஹோம்வொர்க் செய்ய வில்லை. அதை அதட்டி அக்குழந்தையின் அம்மா விசாரிக்கிறார். எப்படியாவது நாளை செய்துவிடுகிறேன் என்று அக்குழந்தை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறது. விடாமல் அம்மா கேட்க, கண்ணீர் விட்டு அழுது கைக்கூப்பி கெஞ்சுகிறது.

(ஒருவேளை அக்குழந்தையின் அம்மா விளையாட்டாக நினைத்து இதை எடுத்திருக்கலாம். ஏனெனில் ஒரு குழந்தைக்கு அம்மாவை விட உரிமை கொண்டவர் யார் இருக்கப் போகிறார்கள். ஆனால், குழந்தை அச்சத்தோடு சொல்வது நமக்கு பதற்றத்தை அளிக்கிறது)

அதைப் பார்க்கும் எவரும் ஒருநிமிடம் ஷாக் ஆகிவிடுவார்கள். கல்வி என்பது மகிழ்ச்சியோடு கற்பது எனும் அடிப்படையே மாறி, கசக்கி பிழிவதாகி விட்டது. மனப்பாடம் செய்வதே கல்வியின் முக்கிய வேலையாகி விட்டது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.