எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை: கே.எஸ் அழகிரி தகவல்!
தமிழகத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 30க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என தான் விரும்புவதாகவும் கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதால் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரை தொடங்குகிறது என்றும் முதலில் திருப்பூரில் தான் பரப்புரை நடைபெறும் என்றும் வாரம் 3 சட்டமன்ற தொகுதிகளில் தோழமை கட்சிகளுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் , கொரோனாவை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.