ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது ஏன்? திருமா பரபரப்பு பேட்டி!
ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக முழுநேரமாக நியமிக்கப்பட்ட நிலையில் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப் பட்டதற்கு திருமாவளவன் உள்ளிட்ட சில கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். உளவுத்துறையோடு தொடர்பில் உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக மத்திய அரசு வேண்டுமென்றே நியமித்து, இன உணர்வையும், மொழி உணர்வையும் அழிக்க திட்டமிட்டுள்ளது என்று திருமாவளவன் சாடினார்.
இந்த சூழலில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவி இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வின் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இருப்பினும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் , “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது; திமுக அரசு என்பதை விட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது. ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது; அவரது பதவியேற்பு குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு வந்தது. ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை” என்றார்.