பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஒ கைது!

 

பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஒ கைது!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னழகன். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலரான தங்கவேலிடம் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, பட்டா மாறுதல் செய்ய அவர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஒ கைது!

ஆனால், லஞ்சம் தர விரும்பாத சின்னழகன், இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ-விடம் கொடுக்கும்படி ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தாள்களை வழங்கினர். அதன்படி, சின்னழகன், சாத்தம்பாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விஏஓ தங்கவேலிடம் ரூ.4 ஆயிரம் பணத்தை வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.