பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ, உதவியாளர் கைது!
கோவை
கோவை அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பன்னிமடை கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் (39) என்பவரிடம் விண்ணப்பித்து உள்ளார்.
அப்போது, பட்டா மாற்றம் செய்ய 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென அவர் கூறியுள்ளார். இதனை விரும்பாத கார்த்திக், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, அவர்கள் வழங்கிய ஆலோசனைப் படி இன்று ராசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, விஏஒ சிவகுமாரிடம் வழங்கினார்.
அப்போது அலுவலகத்தில் மறைந்திருந்த டிஎஸ்பி கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர் பழனிசாமியை கையும் களவுமாக கைதுசெய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.