இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி மூவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்
திருப்பத்தூர்
வாணியம்பாடி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் சேகர்(48). இவர் தக்காளி லோடு ஏற்றுவதற்காக செய்யாறு பகுதியை சேர்ந்த முருகன்(33) மற்றும் குணசேகர் (32) ஆகியோடன், நேற்றிரவு மினிவேனில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். வாணியம்பாடி அடுத்த நெக்குத்தி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினிவேன், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை போலீசார் மீட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நடுப்பட்டறையை சேர்ந்த ஆகாஷ் மற்றும் பெத்த வேப்பம்பட்டையை சேர்ந்த சங்கர் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சேகர் உள்ளிட்ட 3 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.