நியாய விலைக்கடை இடமாற்றத்திற்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

 

நியாய விலைக்கடை இடமாற்றத்திற்கு எதிராக  பொதுமக்கள் சாலை மறியல்

வாணியம்பாடியில் நியாய விலைக்கடை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

நியாய விலைக்கடை இடமாற்றத்திற்கு எதிராக  பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதியில் அரசு நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நகராட்சியின் 29 மற்றும் 30-வது வார்டுக்கு உட்பட் ரேஷன் அட்டைதாரர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனிடையே, இந்த கடையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருப்பதால் பொருட்கள் வாங்க சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை ஏற்று, நேதாஜி நகர் கிழக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் 30-வது வார்டில் செயல்பட்டு வந்த ரேஷன் கடையை காலிசெய்து, புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியது.

நியாய விலைக்கடை இடமாற்றத்திற்கு எதிராக  பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நியாய விலைக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வாணியம்பாடி – ஆலங்காயம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் டிஎஸ்பி பழனிசெல்வம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நியாய விலைக்கடையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர்.