மனதில் பட்ட கருத்துகளை, துணிச்சலாகவும், தயக்கம் இன்றியும் சொல்வார்! சுதாங்கன் மறைவுக்கு வைகோ இரங்கல்

 

மனதில் பட்ட கருத்துகளை, துணிச்சலாகவும், தயக்கம் இன்றியும் சொல்வார்! சுதாங்கன் மறைவுக்கு வைகோ இரங்கல்

மூத்த பத்திரிகையாளரும், ஜூனியர் விகடன், தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியராகவும் இருந்த சுதாங்கன், இன்று மாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம், அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறந்த பத்திரிகையாளரும், தொலைக்காட்சி ஊடக இயலாளருமான எனது இனிய நண்பர் சுதாங்கன் இயற்கை எய்தினார் என்ற செய்தி, தாங்க இயலாத அதிர்ச்சியையும், துயரத்தையும் தந்தது. திருவைகுண்டம் அருகே தென்திருப்பேரை வைணவத் திருத்தலத்தில் பிறந்தவர். எண்பதுகளின் தொடக்கத்தில், அவர் ஆனந்த விகடனில் செய்தியாளராக இருந்தபோது, தில்லியில் என் இல்லத்தில் சில நாள்கள் தங்கி இருந்தார். அவர்தான், டைகர் ஆஃப் பார்லிமெண்ட் என்று என்னைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதினார்.

மனதில் பட்ட கருத்துகளை, துணிச்சலாகவும், தயக்கம் இன்றியும் சொல்வார்! சுதாங்கன் மறைவுக்கு வைகோ இரங்கல்

நட்புக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுப்பவர். மிகச்சிறந்த எழுத்தாளர். மனதில் பட்ட கருத்துகளை, துணிச்சலாகவும், தயக்கம் இன்றியும் சொல்வார். எல்லாப் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, கேள்விகள் தொடுக்கவும், விடைகள் விடுக்கவும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய அவர் மறைந்தார் என்பதை நினைத்தாலே நெஞ்சம் வேதனை அடைகின்றது. அவரது மறைவு, பத்திரிகைத் துறைக்கு, ஊடகத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரை இழந்து துன்பத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.