‘சசிகலா காலாவதியான மருந்து’ – அதிமுகவின் வைகைச்செல்வன் விமர்சனம்!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகளாக அடைபட்டுக் கிடந்த சசிகலா கடந்த 27ம் தேதி ரிலீஸ் ஆனார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரிலேயே சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை முடிந்த பிறகு அங்கேயே தங்கி இருந்தார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு சசிகலா நேற்று தமிழகம் திரும்பினார்.
அதிமுக கொடியை பயன்படுத்த விடாமல் இருக்க அதிமுக தலைமை பல முட்டுக்கட்டைகளை போட்டும் அதனை தகர்த்தெறிந்த சசிகலா, சென்னை வரையிலேயே காரில் அதிமுக கொடியுடன் தான் வந்து இறங்கினார். வழி நெடுகிலும் அவருக்கு அதிமுகவினர் உட்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலாவுடன் பகைமை பாராட்டும் அதிமுகவில், இனி என்னவெல்லாம் நடக்குமோ என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக்குவதற்கு நான் தான் தீர்மானம் வாசித்தேன். அவர் தற்போது காலாவதியான மருந்து மாதிரி தான். அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் எடப்பாடியாரும் பன்னீர் செல்வமும் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் கடன் பாக்கி வைத்தவர் தான் டிடிவி தினகரன் என விமர்சித்த வைகைச்செல்வன், உதயநிதி மற்றும் ஸ்டாலினிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.