40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி பரிசோதனை – ரஷ்யா அதிரடி திட்டம்
இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 28 லட்சத்து 61 ஆயிரத்து 688 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 21 நாட்களுக்குள் 28 லட்சம் அதிகரித்து விட்டது.
கொரோனா தடுப்பூசி மட்டுமே நோய்ப் பரவலைத் தடுக்க ஒரே வழி எனும் சூழலை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. அதற்கேற்ப, ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்துவிட்டது.
ரஷ்யாவின் கமேலயா நிறுவனம் தயாரித்திருக்கும் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் தடுப்பூசியின் நம்பகத் தன்மையை உலகிற்கு காட்ட, தன் மகளின் உடலில் அந்த மருந்தைச் செலுத்தியிருக்கிறார்.
இதையெடுத்து, உலகம் முழுவதிலிருந்து இந்த கொரோனா தடுப்பூசியை வாங்க ஆர்டர் வந்தவண்ணம் இருக்கின்றன. 1 பில்லியன் ஆர்டர் வந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் உள்நாட்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற, ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை நாட்டில் பரவலாகப் பரிசோதிக்க முடிவெடுத்துள்ளது கமலேயா நிறுவனம்.
அதன்படி, நாட்டின் 45 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைத்து, 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியைப் போட விருக்கிறது. இதை வெளிநாட்டிலிருந்து ஆய்வுக்குழு பார்வையிடும் என்றும் சொல்லப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை கட்டம் அடுத்த முக்கியமான இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. அனைத்திலும் வெற்றியாகி, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.