தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் பலி… பச்சிளம் குழந்தைகளுடன் ஆட்சியரிடம் புகாரளித்த கணவர்!

 

தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் பலி… பச்சிளம் குழந்தைகளுடன் ஆட்சியரிடம் புகாரளித்த கணவர்!

சேலம்

ஆத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில், செவிலியர் மீது நடவடிக்கை கோரி சேலம் ஆட்சியரிடம் கணவர் புகார் அளித்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுபலட்சுமிக்கு, பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து, குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் பலி… பச்சிளம் குழந்தைகளுடன் ஆட்சியரிடம் புகாரளித்த கணவர்!

கடந்த மாதம் 19ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்ற காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சித்ரா என்பவர், கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. இதனால், சுபலட்சுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 23ஆம் தேதி வீட்டிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது கணவர் மூர்த்தி செவிலியர் மீது, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு தனது இரு பெண் குழந்தைகளுடன் வந்த மூர்த்தி, தடுப்பூசி செலுத்திய செவிலியர் சித்ரா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும், தனது இரு குழந்தைகளையும் வளர்க்க அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.