டெல்லி, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து லாக்டவுன் தளர்வை அறிவித்த உத்தர பிரதேச அரசு
டெல்லி, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தர பிரதேச அரசு வரும் 1ம் தேதி முதல் லாக்டவுனை தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து முதலில் வார இறுதி லாக்டவுனை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்படுத்தியது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து முழு ஊரடங்கை அமல்படுத்தி தொடர்ச்சியாக அதனை நீட்டி வந்தார். தற்போது ஜூன் 1ம் தேதி முதல் லாக்டவுனை தளர்த்தப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக கூறுகையில், 55 மாவட்டங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளோம். அதேசமயம் கொரோனா பாதிப்பு 600க்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும். அந்த மாவட்டங்களில் பாதிப்பு 600க்கு கீழ் குறையும் போது ஊரடங்கு தானாகவே முடிவுக்கு வரும். நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதம், மிகக் குறைந்த நேர்மறை விகிதம் மற்றும் அதிக மீட்பு விகிதம் மாநிலத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள உத்தர பிரதேச தலைநகர் லக்னோ உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கில் தளர்வு கிடையாது. பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இருப்பினும் இந்த கல்வி நிறுவனங்களில் நிர்வாக பணிக்காக அலுவலகங்களை திறந்து கொள்ளலாம். உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு, வார இறுதி கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.