எங்க தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தகுதியானது.. வேகமாக ஒப்புதல் கொடுங்க.. பைசர் நிறுவனம்
எங்களது தடுப்பூசி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு தகுதியானது எனவே இந்தியாவில் பயன்படுத்த வேகமாக ஒப்புதல் கொடுங்க என்று மத்திய அரசிடம் பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக்கிய ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகள் போடப்படுகிறது. சப்ளை குறைவாக உள்ளதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய பைசர், மாடர்னா போன்ற வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேசி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் வரும் ஜூலை முதல் அக்டோபருக்குள் இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசிகள் தருவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் இழப்பீடு உள்ளிட்டவற்றில் சில தளர்வுகளை அந்நிறுவனம் மத்திய அரசிடம் கோரியுள்ளது. அண்மையில் பைசர் நிறுவனம் இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை நடத்தியது.
அப்போது, பல்வேறு நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை அதன் தடுப்பூசிக்கான செயல்திறன் சோதனைகள் மற்றும் ஒப்புதல்கள் அளித்தது தொடர்பான தரவுகளை இந்திய அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டதாக தகவல். தற்போது எங்களது தடுப்பூசி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு செலுத்த தகுதியானது எனவே இந்தியாவில் பயன்படுத்த வேகமாக ஒப்புதல் கொடுங்க என்று மத்திய அரசிடம் பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.