மோடி நாடு கடத்தல் வழக்கு… நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
மும்பையிலுள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் இந்த மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்குத் தப்பியோடினார்.
அவரை நாட்டிற்கு அழைத்துவரும் முயற்சியை சிபிஐயும் அமலாக்கத் துறையும் இறங்கின. முதற்கட்டமாக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2019ஆம் ஆண்டு லண்டனில் அவர் கைதுசெய்யப்பட்டார். சிறையிலடைக்கப்பட்ட அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றத்தில் அப்போதே வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த இரு வருடங்களாக நடந்துவரும் நிலையில், ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 25ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என லண்டன் வெட்மினிஸ்டர் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் கூஸ் தெரிவித்திருந்தார். இன்று வாசிக்கப்படும் தீர்ப்பில் மோடியை நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.