அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக கொண்ட ’கர்ணன்’ – உதயநிதி

 

அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக கொண்ட ’கர்ணன்’ – உதயநிதி

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள ‘கர்ணன்’ படம் கொண்டாடப்பட வேண்டியது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

Image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க, பண்டராத்தி புராணம் உள்ளிட்ட பாடல்கள் படம் வருவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றன. இப்படத்தில் மலையான நடிகையான ரஜிஷா தமிழில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சிறப்பாக காட்சிப்படுத்திய மாரி செல்வராஜின் முயற்சிக்கு திரைபிரபலங்கள் பலர் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி” என பதிவிட்டுள்ளார்.