சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிழப்பு: உதயநிதி ஸ்டாலின்

 

சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிழப்பு: உதயநிதி ஸ்டாலின்

தல, கூல் கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சுதந்திரதின கொண்டாட்டத்தில் திளைத்திருந்த இந்திய மக்களுக்கு தோனியின் அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியது. தோனியை தொடர்ந்து ‘சின்ன தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தும் அவர் குறித்து புகழாரம் சூட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எம்.எஸ்.தோனி! முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர். சிறு நகரத்து இளைஞர்களின் தன்னம்பிக்கை. மிகச்சிறந்த கேப்டன். சர்வதேச போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெறுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிழப்பு. தன் வாழ்வின் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் வெல்ல தோனிக்கு என் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.