மீண்டும் எடப்பாடி சசிகலா காலில் விழுந்த சம்பவத்தை இழுத்த உதயநிதி!
சசிகாலா-எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதற்காக அவர் மீது அவதூறு வழக்கும் போடப்பட்டது. இருப்பினும், பிரச்சாரத்திற்குச் செல்லும் இடமெங்கும் அதிமுகவின் தலைமைகளான எடப்பாடி பழனிச்சாமியையும் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இன்று காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சசிகலா குறித்து மீண்டும் பேசியுள்ளார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இன்று பங்கேற்றார். அப்போது காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் பொது மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் தமிழகத்திற்கு இதுவரை ஏதும் செய்யவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பல கோடி மதிப்பில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகும் நாளில் திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் சமாதியைத் திறந்து வைத்தார். ஆனால் சசிகலா அன்றைய தினம் மருந்துவமனைக்குச் சென்று விட்டார்.
ஆனால் பெங்களூரில் இருந்து சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்குச் சென்று விடுவார், மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே நேற்று இரவோடு இரவாக திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது. சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வராக மறைந்த ஜெயலலிதாவிற்கு தான் மக்கள் வாக்களித்தார்கள். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான் படிப்படியாக தான் முன்னேறி வந்தேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் சசிகலா காலில் விழுந்து தான் முதல்வரானார். மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை” என்றார்.