பேனர் வைக்காதீங்க; சால்வைக்கு பதில் புத்தகங்கள் கொடுங்க- உதயநிதி

 

பேனர் வைக்காதீங்க; சால்வைக்கு பதில் புத்தகங்கள் கொடுங்க- உதயநிதி

பரப்புரைக்கு செல்லும் இடங்களில் சால்வைக்கு பதிலாக தனக்கு புத்தகங்கள் வழங்குகள் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அடிமை ஆட்சியாளர்களால் இருளில் உள்ள தமிழகத்திற்கு விடியல் தரவுள்ள கழக தலைவர் எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளேன்.

செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் உள்ள எழுச்சியைப் பார்க்கையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வளவு மகிழ்ச்சியான சூழலில் சில தர்ம சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. உற்சாக மிகுதியில் கழக நிர்வாகிகள் சிலர் என்னை வரவேற்று பிளக்ஸ், பேனர்கள் வைப்பதை காணமுடிகிறது.

பேனர் வைக்காதீங்க; சால்வைக்கு பதில் புத்தகங்கள் கொடுங்க- உதயநிதி

தயவு செய்து அவற்றை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதேபோல சுவரொட்டிகளில் என் படங்களை பயன்படுத்த கூடாது.திமுகவை கட்டமைத்த பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர்

கருணாநிதி, கழகத்தை வழிநடத்தும் தலைவர் ஸ்டாலின் ஆகிய நான்கு தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், என்னை வரவேற்கும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடிக்கிறார்கள். இதையும் அறவே தவிர்க்க வேண்டும். எனக்கு நினைவு பரிசு தரும் தோழர்கள் சால்வைகள். மாலைகள் போன்றவற்றை தவிர்த்து விட்டு. புத்தகங்களைப் பரிசளிக்குமாறு வேண்டுகிறேன்.

ஏற்கனவே படித்த புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன். இப்படி நீங்கள் தரும் புத்தகங்கள் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு வழங்க ஏதுவாக இருக்கும்.

எளிமையே வலிமை என்பதை உணர்ந்து இணைந்து செயல்படுவோம். நம் தலைவர் தலைமையில் அரசை அமைப்போம். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆதிக்க அடிமை கூட்டணியை அடித்து விரட்டும் வரை விடியலை நோக்கி நம் பிரச்சார பயணம் தொடரட்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.