இளைஞரணியை விரிவுபடுத்தும் உதயநிதி… புது நிர்வாகிகளை நியமிக்க உத்தரவு
இளைஞரணியை விரிவுபடுத்தும் உதயநிதி… புது நிர்வாகிகளை நியமிக்க உத்தரவு
தி.மு.க-வில் இளைஞரணியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இளைஞரணி செயலாளர் உதயநிதி இறங்கியுள்ளார். புதிய நிர்வாகிகளை நியமிக்க மாவட்ட அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் நீண்ட காலம் இருந்தார். கட்சியின் மிக முக்கிய அடையாளமாக இளைஞரணி இருந்தது. அவர் பொருளாளராக, கட்சித் தலைவராக உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த பதவிக்கு அவரது மகன் உதய நிதி ஸ்டாலின் கொண்டுவரப்பட்டார். தி.மு.க-வில் வேறு எந்த ஒரு அணிக்கும் இல்லாத சுதந்திரம் இளைஞரணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இளைஞரணியை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியை உதயநிதி பெற்றுள்ளார்.
“திமுக இளைஞர் அணி விரிவுப்படுத்தப்படுகிறது;
ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் வட்டங்களில் நிர்வாகிகள் நியமனம்”
– @dmk_youthwing செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள் அறிவிப்பு’#DMK pic.twitter.com/zfYc3i0tWY
— DMK (@arivalayam) June 26, 2020
விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஒன்றிய, நகர, பேரூர் வட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாக உதய நிதி ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இளைஞரணி தற்போது மாவட்டம், மாநகரம், ஒன்றியம், பகுதி, நகரம், பேரூர் ஆகிய இடங்களில் உள்ளது. பெருமளவில் உறுப்பினர்கள் சேர்ந்து வருவதால் இதை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.
இந்த நிலையில் ஒன்றிய கிளைகள், பகுதி, நகரம், பேரூர் வட்டங்களில் இளைஞரணிக்கு அமைப்பாளர்களும், பேரூர் வட்டங்களில் ஓர் அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்களும் கொண்ட இளைஞரணி அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் மாவட்ட அமைப்பாளர்கள் தங்கள் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி ஈடுபடும்படி கேட்டுக்கொள்கிறேன். 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களை இப்பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யலாம்” என்று கூறியுள்ளார்.