திருப்பத்தூர்
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். நேதாஜி நகர் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் சிவலிங்கம், மோகன் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த வாணியம்பாடியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, சிவலிங்கம் மற்றும் மோகன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.