சென்னையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய தடை!
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா அதிகம் பரவி வரும் மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் நாளை முதல் இம்மாத இறுதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா பரவுதலை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். அதவாது மண்டலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டும், பெரும்பாலான மாவட்டங்கள் அதன் எல்லைக்குள் நுழைய இ-பாஸ் ஐ கட்டாயம் ஆக்கியுள்ளன. அதன் படி பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. அதே போல கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்துள்ள சென்னையிலும்,பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இரு சக்கர வாகனங்கள் 19/06/2020 முதல் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அனுமதி உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.