கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – தம்பதி பலி!
தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி வாணி, தனியார் பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று கண்ணனும், அவரது மனைவி வாணியும் இருசக்கர வாகனத்தில் வில்வமரத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
எட்டயபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை கண்ணன் முந்தி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனம், கண்ணன் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சாலையில் விழுந்த தம்பதியினர் மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி ஏறியது.
இதில், வாணி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கண்ணன் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த மகாராஜன், அவரது தாய் வசந்தாவை போலீசார் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கண்ணன் உயிரிழந்தார். இதனையடுத்து, மகாராஜன், வசந்தாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்ந்து, கண்ணன், வாணி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய எட்டயபுரம் போலீசார், விபத்து குறித்த வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.