இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி!

 

இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி!

கோவை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (71). விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் இருந்து அருகேயுள்ள தனியார் பள்ளிக்கு முன்பாக நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.

இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி!

அப்போது, அந்த வழியாக கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று, ராஜாமணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராஜாமணி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ராஜாமணியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சொகுசு காரை ஓட்டி வந்த அர்த்தனாரி பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.