அரசுப்பேருந்து மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதல்… பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம்…
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அரசுப்பேருந்து மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து, இன்று காலை ஈரோட்டுக்கு அரசுப்பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. பேருந்தை விக்னேஷ்வரன் என்பவர் ஓட்டிச் சென்றார். கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளி பாளையம் பகுதியில் சென்றபோது பேருந்து மீது, எதிரே சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த பிக் அப் வேன் நேருக்குநேர் மோதி விபத்திற்கு உள்ளானது.
அப்போது, பேருந்தை பின் தொடர்ந்து வந்த லாரியும், கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின் பகுதியில் அதிவேகமாக மோதியது. இதில் பிக் அப் வேன் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ்வரன், நடத்துநர் லட்சுமி காந்தன், பிக் அப் வேன் ஓட்டுநர் சபரி மற்றும் பெண் பயணிகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மினிவேனில் இடிபாடுகளுக்குள் சிக்கி போராடிய பீகார் இளைஞரை சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வேன் ஒட்டுநர் சபரி ஓட்டுநர் உரிமம் பெறாமல் லோடு சரக்கு வாகனத்தை இயக்கியபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்தினால் சத்தியமங்கலம் – மைசூர் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.