மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி… அரசு மருத்துவர் உள்பட 2 பேர் கைது

 

மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி… அரசு மருத்துவர் உள்பட 2 பேர் கைது

திருப்பத்தூர்

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் 27 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த அரசு ஓமியோபதி மருத்துவர் உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளிபாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் வரதராஜன். இவரது மனைவி புஷ்பவள்ளி. இவருக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஓமியோபதி மருத்துவராக பணிபுரியும், திருப்பத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனடிப்படையில் வரதராஜனின் மகள் நர்மதாவுக்கு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக, மருத்துவர் ரவிச்சந்திரன், அவரது மைத்துனர் வெங்கடேசன், அவரது மனைவி செவிலியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி… அரசு மருத்துவர் உள்பட 2 பேர் கைது

இதனை நம்பி வரதராஜன் – புஷ்பவள்ளி தம்பதியினர் சுமார் 27 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உள்ளனர். ஆனால், உறுதி அளித்தபடி மருத்துவ சீட் வாங்கி தராத நிலையில் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இதுகுறித்து, திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, மருத்துவர் ரவிச்சந்திரன் மற்றும் வெங்கடேசனை கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருப்பத்தூரை சேர்ந்த சரவணன், அவரது மனைவி வித்யா மற்றும் செவிலியர் ராஜேஸ்வரி ஆகியோரை தேடி வருகின்றனர்.