கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலி; 3 பேர் படுகாயம்!

 

கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலி; 3 பேர் படுகாயம்!

தென்காசி

ஆலங்குளம் அருகே கார் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வல்லம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் தமிழர் விடுதலை களம் என்ற அரசியல் கட்சியில், பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நெல்லையில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்ற சிவகுமார், பின்னர் மாவட்ட செயலாளர் கட்டபொம்மன் என்பவருடன் காரில் திரும்பி கொண்டிருந்தார்.

அவருடன் கீழ வெள்ளக்காலை சேர்ந்த கட்சி நிர்வாகி ஹரிஹர சுதன் (29) உள்ளிட்டோரும் உடன் சென்றனர். நள்ளிரவில் ஆலங்குளம் அடுத்த தொட்டியன்குளம் பகுதியில் சென்றபோது காரின் மீது, எதிரே வந்த டாரஸ் லாரியில் இருந்த கரும்பாலை இயந்திரத்தின் பாகம் மோதியது.

கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலி; 3 பேர் படுகாயம்!

இதில் காரில் அமர்ந்திருந்த சிவகுமார் மற்றும் ஹரிஹர சுதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டபொம்மன் மகேந்திரகுமார் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, மன்னார்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மோதிலால் (60), என்பவரை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.