தாராபுரத்தில் இருக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

 

தாராபுரத்தில் இருக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

திருப்பூர்

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்திச்சென்ற 2 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கம்பம் பகுதியில் இருந்து தாராபுரம் வழியாக கோவைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாராபுரம் அருகே கோனேரிப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை மறித்து விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதனையிட்டனர். அப்போது, கஞ்சா பொட்டலங்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.

தாராபுரத்தில் இருக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

இதனை அடுத்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியகுளத்தை சேர்ந்த முத்துராஜ் மற்றும் வத்தலகுண்டை சேர்ந்த காஜாமைதீன் என்பது தெரியவந்தது. மேலும், கம்பம் பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்திச்சென்று, கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து இருவர் மீதும் வழக்கப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ 250 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.