சங்கரன்கோவிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

 

சங்கரன்கோவிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

தென்காசி

சங்கரன்கோவிலில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சுசீலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி வடக்கு ரத வீதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் சுசீலாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். பட்டப்பகலில் நடந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, தென்காசி மாவட்ட எஸ்.பி., கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஜாகீர் உசேன், ஆய்வாளர் ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

சங்கரன்கோவிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

இவர்கள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று சுரண்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சாம்பவர் வடகரையை சேர்ந்த மாரியப்பன் மகன் மது(24) மற்றும் அல்லாபிச்சை மகன் காஜாமைதீன் (23) என்பதும், இவர்கள் சுசீலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களுக்கு வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.