ட்விட்டருக்கு ஆரம்பமானது ஆபத்து… சத்தமின்றி செய்கை செய்த மத்திய அரசு!
#IStandWithTwitter என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்வதற்கான சரியான தருணம் கனிந்து வந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். மத்திய அரசின் புதிய ஐடி சட்ட விதிகளுடன் உடன்படாமல் அரசுக்கு தண்ணி காட்டி வந்த ட்விட்டரால் இனியும் அவ்வாறு செய்ய முடியாது. பிப்ரவரி 25ஆம் தேதி அமலான ஐடி விதிகளுடன் உடன்பட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. விதிகளுக்கு உடன்பட்டால் இந்தியாவில் தொழில் நடத்தலாம். இல்லையென்றால் சொந்த ஊருக்கு நடையைக் கட்டலாம். இதுதான் மத்திய அரசின் உறுதி மற்றும் இறுதி முடிவாக இருந்தது.
அவகாசம் எடுத்துக்கொண்டாலும் விதிகளுக்கு உடன்பட வேண்டும். மத்திய அரசின் கறாருக்கு அடிபணிந்த கூகுள், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்கள் விதிகளை ஏற்றுக்கொண்டன. விதிகளின்படி புகார் அதிகாரிகளை நியமித்துவிட்டன. ஆனால் ட்விட்டர் மட்டுமே எதையும் செய்யாமல் மக்களின் கருத்துரிமைக்கு எதிராக மத்திய அரசின் விதிகள் இருப்பதாக விமர்சித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தேவையில்லாமல் அவதூறு பரப்பாதீர்கள் என மத்திய அரசு கூறியது. எப்போது சிக்குவார்கள் என்று எதிர்நோக்கி காத்திருந்தது மத்திய அரசு.
முத்தாய்ப்பாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் ஃப்ளு டிக்கை ட்விட்டர் தூக்கியது. கூடவே பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ஃப்ளு டிக்கையும் தூக்க ட்விட்டர் மீது மத்திய அரசுக்கு கோபம் கொப்பளித்தது. அன்றே இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. “ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய ஐடி விதிகளுக்கு தாமதம் செய்யாமல் உடனடியாக உடன்பட வேண்டும். அவ்வாறு உடன்படாவிட்டால் ஐடி சட்டம் மற்றும் இந்தியாவின் பிற தண்டனைச் சட்டங்களின்படி மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என மிகக்கடுமையாகக் குறிப்பிட்டிருந்தது.
அதன் முதல்படியாக ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இந்த விஷயம் நேற்று தான் தெரியவந்திருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லை என்பதற்காக இஸ்லாமியர் பெரியவர் ஒருவரின் தாடியை இந்துத்துவர்கள் மழித்ததாகவும் அவரை துன்புறுத்தியதாகவும் ஒரு செய்தி பரவியது. விவகாரம் ட்விட்டரில் மிக வேகமாகப் பரவியது. இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்தச் செய்தி பொய்யானது என்றும், தாயத்து விற்றது தொடர்பாக இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் அந்த முதியவரை துன்புறுத்தியிருக்கிறார்கள்.
இது மதப் பிரச்சினை அல்ல என்று தெளிவுப்படுத்தினர். தெளிவுப்படுத்திய பின்பும் மதப் பிரச்சினை என போடப்பட்ட ட்வீட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கவில்லை. இதனால் ட்விட்டர் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மத்திய அரசு சட்டப் பாதுகாப்பை விலக்கிக் கொண்டது தான். மூன்றாம் தர ஆட்கள் இதுபோன்று ட்வீட் செய்தாலும் அதற்கு ட்விட்டரே பொறுப்பு. இதற்கு முன்னர் அரசு வழங்கிய சட்டப் பாதுகாப்பு அதிலிருந்து காப்பாற்றியது. இனி அது நடக்காது. ட்விட்டருக்கு அபாயம் தொடங்கியுள்ளது.