சிறுவனின் உயிரை பறித்த தொலைக்காட்சி பெட்டி!- சென்னையில் சோகம்

 

சிறுவனின் உயிரை பறித்த தொலைக்காட்சி பெட்டி!- சென்னையில் சோகம்

தாம்பரம் அருகே 3 வயது சிறுவன் மீது தொலைகாட்சி பெட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் இரண்டாவது ஆண் குழந்தையான கவியரசு (3) நேற்றிரவு அலமாரியில் உள்ள தொலைகாட்சியின் பெட்டியின் மீது இருந்த செல்போனை எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது நிலை தடுமாறிய தொலைகாட்சி பெட்டி சிறுவனின் தலையில் விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இதனையடுத்து உடலை கைப்பற்றிய சேலையூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.