‘ஆபரேஷன் செய்யாமலேயே கட்டி அகற்றம்’ : அசத்திய அரசு மருத்துவர்கள்!
அறுவை சிகிச்சை இல்லாமலேயே தொழிலாளிக்கு கல்லீரலில் கட்டியை அகற்றி திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக் கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த மருத்துவமனையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கல்லீரலில் கட்டியுடன் சிகிச்சைக்கு வந்த தொழிலாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே கட்டியை அகற்றி அம்மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த முகம்மது ரபீக் (44) என்ற தொழிலாளிக்கு கல்லீரலில் சீல் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பொதுவாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்யப்படும் நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்டியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் படி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் கட்டியின் அளவையும் தன்மையையும் ஆய்வு செய்து நுண் துளையிட்டு கட்டியை அகற்றியுள்ளனர்.
முகம்மது ரபீக் தற்போது நலமாக இருப்பதாகவும் அவருக்கு நுண்துளையிடப்பட்டு இருப்பதால் சில நாட்களுக்கு நடக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்த சாதனையை அப்பகுதி மக்களும் சக மருத்துவர்களும் பாராட்டி வருகின்றனர்.