தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்

 

தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்

கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவான வெற்றிவேலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி,தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் எனது இனிய நண்பருமான வெற்றிவேல் Ex.MLA அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. புரட்சித்தலைவி அம்மா மற்றும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிபடச் சொல்லி இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்.

தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்

துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப் போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர். வெற்றி… வெற்றி என வாய் நிறைய அழைத்து இனியாரிடம் பேசப்போகிறேன் என்று நினைக்கிற போதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது. வெற்றிவேல் அவர்களின் மறைவு கழகத்திற்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சிய பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.