வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு… பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட டிரம்ப்!
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் உடனடியாக அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினசரி கொரோனா நிலவரம் பற்றிய தகவலைப் பகிர்வது வழக்கம். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் எழுந்தது. உடனடியாக பேட்டி
அளிக்கும் அறைக் கதவுகள் மூடப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்துகொண்டு அவரை அவசர அவரமாக பேட்டியிலிருந்து அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து ரகசிய பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், “வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கி வைத்திருப்பதாக 51 வயதான நபர் ஒருவர் போலீஸ் அதிகாரியை மிரட்டினார். இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் இருவரும் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.