இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்; அக்கா – தம்பி பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்; அக்கா – தம்பி பலி!

அரியலூர்

அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அக்காள், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் கல்லகம் பகுதியை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவருக்கு சர்மிளா(26), மாதவன் என 2 பிள்ளைகள் உள்ளனர். சர்மிளாவுக்கு திருமணமான நிலையில், நேற்று முன்தினம் தம்பி மாதவனுடன் கீழப்பழுவூர் அடுத்த கீழகொளத்தூரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

தொடர்ந்து, நேற்று இருவரும் இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். கீழப்பழுவூர் அருகே தஞ்சை – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்; அக்கா – தம்பி பலி!

இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த சர்மிளா, மாதவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக ஞானமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சாலை விபத்தில் அக்கா – தம்பி உயிரிழந்த சம்பவம் கல்லகம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.