சென்னையில் மீண்டும் களமிறக்கப்பட்ட ட்ரோன் கேமராக்கள்.. கடுமையாக்கப்படும் ஊரடங்கு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் 2,141பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே 38 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவு கொரோனா பரவியதற்கு காரணம், ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டது தான் என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூன் 30 வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் போடப்பட்ட ஊரடங்கை போன்று, 4 மாவட்டங்களில் கடுமையான வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாமலும், தேவையில்லாமல் வெளியே வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டும் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன. அதே போல 200க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை மக்களை கண்காணிக்க மீண்டும் ட்ரோன் கேமராக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அதனை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டு, அறிவுரை வழங்கியுள்ளார்.