திருச்சி- சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்-முன்பதிவு பயணிகள் மட்டுமே அனுமதி
திருச்சி
ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து துவங்கியுள்ளது. இதையடுத்து இன்று, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் ரயில் நிலையங்களில் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கப்படுவதால், திருச்சி ஜங்ஷன் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகு ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்னரே பயணிகள் வரவேண்டும் எனவும் அனைவரும் முகக்கவசம் சமுக
இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பயணிகள் தவிர மற்ற யாரும் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான பெட்டிகளில் 100 சதவீத பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். ஏசி பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் கம்பளிப் போர்வைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.