மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்ப உற்சவம் – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்!

 

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்ப உற்சவம் – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்!

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் நேற்றிரவு நடந்த தெப்ப உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பங்குனி மாத தெப்ப திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று மதியம் சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 7 மணி அளவில் தெப்பக்குளத்தில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன், தாயுமான சுவாமி எழுந்தளினார். பின்னர் திருமுறைகள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க இரவு 8 மணி அளவில் தெப்ப உற்சவம் தொடங்கியது. தெப்பக்குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி, பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்ப உற்சவம் – ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்!

இதனை திருச்சி நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவ என்ற பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10.30 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் இருந்து சுவாமி மற்றும் அம்பாள் வெளியே வந்தனர். பின்னர், நந்திகோவில் தெரு, ஆண்டாள் வீதி, சறுக்குப்பாறை வழியாக இரவு 12 மணி அளவில் கோயிலை சென்றடைந்தார்.

இன்று காலை 11 மணியளவில் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் தெப்ப திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் மற்றும் கோயில் உதவி ஆணையர் விஜயராணி உள்ளிட்டோர் மேற்கொண்டிருந்தனர்.