திருச்சியில் பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

திருச்சியில் பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

திருச்சி

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா அருள்(35). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். பொதுமுடக்கத்தை ஒட்டி, துவாக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுக்குடி சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், ஜோஸ்வா அருளுக்கு நேற்று முன்தினம் உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவர் அதிகாரிகளிடம் விடுமுறை வழங்கும்படி கேட்டுள்ளார். ஆனால், திருவெறும்பூர் டிஎஸ்பி பணியமர்த்தி உள்ளதால், அவரிடமே கேட்க வேண்டுமென கூறியுள்ளனர். இதனிடையே, ஜோஸ்வா அருள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், உடல்நிலை தொடர்ந்து சரியில்லாததால் நேற்று அவர் விடுமுறை எடுத்து உள்ளார்.

திருச்சியில் பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

இதனையறிந்த உயர் அதிகாரிகள், அவரை உடனடியாக பணிக்கு வரும் படி கூறி உள்ளனர். இதனால், ஜோஸ்வா அருள் வீட்டில் இருந்து புறப்பட்டு புதுக்குடி சோதனைச் சாவடிக்கு பணிக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஜோஸ்வா அருள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் சக காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளனர். இதனால் காவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் ஜோஸ்வா அருளை அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உடல்நிலை சரியில்லை என கூறியும் விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்தியதால் காவலர் உயிரிழந்த சம்பவம், சக காவலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஜோஸ்வா அருள் மரணம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.