`2வது தலைநகரமாக்க திருச்சி தகுதியானதுதான்!’- சொல்கிறார் மகேஷ் பொய்யாமொழி

 

`2வது தலைநகரமாக்க திருச்சி தகுதியானதுதான்!’- சொல்கிறார் மகேஷ் பொய்யாமொழி

“இன்றைய தலைமுறையின் கருத்து திருச்சியே 2-வது தலைநகராக வேண்டும். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் திருச்சியில்தான் உள்ளன. எல்லா வகையில் தகுதியானதும் திருச்சிதான்” என்று திமுக எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தமிழகத்தில் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கூறிவருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, திருச்சியை 2வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திமுகவை சேர்ந்த கே.என்.நேரு ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக இளைஞரணி துணைச் செயலாளரும் திருவெறும்பூர் எம்.எல்.ஏவுமான மகேஷ் பொய்யாமொழி, திருச்சி தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டின் 2-வது தலைநகர் என்பதற்கு திருச்சி மட்டுமே பொருத்தமானது. திருச்சியை தலைநகராக்க எம்.ஜி.ஆர் எடுத்த முடிவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய தலைமுறையின் கருத்து திருச்சியே 2-வது தலைநகராக வேண்டும். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் திருச்சியில்தான் உள்ளன. எல்லா வகையில் தகுதியானதும் திருச்சிதான்” என்றார்.

மேலும், அவரிடம் செய்தியாளர்கள், திமுகவில் உட்கட்சி பூசலால் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவில் உட்கட்சி பூசல் இல்லை. உட்கட்சி பூசல் என்பது சிலரின் அனுமானமே. முதன்மைச் செயலாளர் கே.என். நேருவை கலந்தாலோசித்தே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறேன் என்று தெரிவித்தார்.